

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதால் அது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் நியமனத்தில் மிகப்பெரியளவில் ஊழல் நடைபெற்றதற்கு முதல்வர் மம்தா பானர்ஜிதான் காரணம். நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமையும்போது, மம்தா பானர்ஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சிறை செல்வார்.
சில நாட்களுக்கு முன்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி,தன்னை பெண் புலி என கூறினார். எந்த புலியும் ஊழலில் ஈடுபடுவதில்லை. மேற்குவங்கம் முழுவதும் ஊழல் நடைபெற மம்தா அரசு அனுமதித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர். ஆசிரியர் நியமனத்தில் மிகப் பெரியளவில் ஊழல் நடைபெற்றுள்ளதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.