Published : 09 Jul 2018 01:16 PM
Last Updated : 09 Jul 2018 01:16 PM
ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பகுதியில் உள்ள மசூதியில் அனைத்து முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.
கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி ஆக்ரா மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தாஜ்மஹால் பகுதியில் உள்ள மசூதியில் ஆக்ரா நகரில் வசிக்கும் முஸ்லிம்கள் தவிர மற்ற முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது. பாதுகாப்பு காரணங்களாலும், வெளிநாட்டில் இருந்தும் வரும் பயணிகளாலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என ஆக்ரா ஆணையம் கருதுவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது எனத் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தாஜ்மஹால் மசூதி மேலாண்மை கமிட்டியின் தலைவர் சயத் இப்ராஹிம் ஹூசைன் ஜைதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில் தாஹ்மஹாலில் உள்ள மசூதியில் ஆக்ரா முஸ்லிம்கள் தவிர மற்ற முஸ்லிகளை வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்ற கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மசூதியில் அனைத்து முஸ்லிம்களும் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், உலகில் உள்ள 7 அதிசயங்களில் ஒன்று தாஜ்மஹால். இங்கு மக்கள் சுற்றிப் பார்க்க மட்டுமே வருகிறார். தொழுகை நடத்த வேண்டுமென்றால், மசூதியில் நடத்தலாம் அதற்கு ஏராளமான மசூதிகள் இருக்கின்றன. ஏன் தாஜ்மஹால் பகுதியில் நடத்த வேண்டும் என்று கேட்கிறீர்கள் என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT