நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன் ரத்து: பாஜக அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன் ரத்து: பாஜக அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published on

புதுடெல்லி: ‘‘கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளதால் வங்கித் துறை சிக்கலை சந்தித்துள்ளது. உழியர்கள் மன அழுத்தத்துடன் மோசமான சூழலில் பணியாற்றுகின்றனர்’’ என மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் குழு, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியது. இதன்பின் எக்ஸ் தளத்தில் ராகுல் கூறியிருப்பதாவது:

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் குழுவை சந்தித்தேன். அவர்கள் தெரிவித்த விஷயங்கள் கவலையளிக்கிறது. பாஜக அரசின் தவறான நிர்வாகத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தனது கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக அரசின் தவறான நிர்வாகத்தால், நேர்மையான ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கித்துறையும் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சுமையை ஜூனியர் ஊழியர்கள் சமாளிக்க வேண்டியுள்ளதால், அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மோசமான சூழ்நிலையில் அவர்கள் பணியாற்றுகின்றனர். வங்கி கடனை திருப்பிச் செலுத்தாவர்களுக்கு கடன் அளிப்பதை வெளிப்படுத்தினால், பணியிடமாற்றம், டிஸ்மிஸ் போன்ற பிரச்சினைகளை ஊழியர்கள் சந்திக்கின்றனர். இரண்டு சம்பவங்களில் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. இதேபோன்ற அநீதிகளை சந்திக்கும் ஊழியர்கள், அவற்றை https://rahulgandhi.in/awaazbharatki என்ற இணையதளம் மூலமாக என்னிடம் பகிரலாம். உங்களுக்காக காங்கிரஸ் கட்சி போராடும். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in