

டெல்லி ஹைதர்பூர் மேம்பாலத்தில் சுற்றித்திரிந்த பசுக்களுக்கு புகலிம் ஒன்றை கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ரேகா குப்தா நேற்று உத்தரவிட்டார்.
டெல்லி ஹைதர்பூர் மேம்பாலத்தில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று 'கான்வாய்' எனப்படும் பாதுகாப்பு வாகனங்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பாலத்தில் பசுக்கள் சுற்றித் திரிந்ததால் முதல்வரின் கான்வாய் திடீரென நிறுத்தப்பட்டது. டிரைவர் ஒருவர் உரிய நேரத்தில் பிரேக் போட்டு காரை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதையடுத்து பாலத்தில் பசுக்கள் திரிவதை பார்த்த முதல்வர் ரேகா குப்தா, காரை விட்டு இறங்கினார்.
அங்கு பசுக்கள் வந்தது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். பசுக்கள் தனது காருக்கு வழிவிடும் வரை பாலத்தில் முதல்வர் சுமார் 15 நிமிடம் செலவிட்டார். அப்போது அந்த பசுக்களுக்கு புகலிடம் ஒன்றை கண்டறியுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் டெல்லியில் சாலைகள் மற்றும் பாலங்களில் கால்நடைகள் சுற்றித் திரிவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ரூ.1 லட்சம் கோடியில் டெல்லி அரசின் பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் நேற்று டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மெட்ரோ தூண்களை ஆய்வு செய்த அவர், அவற்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.