Published : 25 Mar 2025 06:04 AM
Last Updated : 25 Mar 2025 06:04 AM
புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல்யாத்திரை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலைக்கு இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுவதை எதிர்த்தும், திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வலியுறுத்தியும் சென்னையில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி சார்பில் வடசென்னை மாவட்ட துணைத் தலைவரான எஸ்.யுவராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘‘ பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தவொரு போராட்டத்துக்கும் போலீஸார் அனுமதி வழங்கக்கூடாது என்றும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தவறாக பயன்படுத்த முடியாது எனக்கூறி வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து யுவராஜ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, பிரசன்னா வராலே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சரியான உத்தரவைத்தான் பிறப்பி்த்துள்ளது. எனவே உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது, எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT