Published : 28 Jul 2018 02:12 PM
Last Updated : 28 Jul 2018 02:12 PM

கருணாநிதி மீண்டு வருவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன்: பினராயி விஜயன்

கருணாநிதி மீண்டு வருவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தீவிர அரசியலிலிருந்து விலகி ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 18-ம் தேதி முதல் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல்நலம் குறித்த செய்திகள் வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டிரயாக்ஸ்டமி செயற்கை சுவாசக் குழாய் புதிதாக பொருத்தப்பட்டதால் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததாக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலை நலமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

திமுக தலைவர் கருணாநிதி குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தன் ட்விட்டர் பக்கத்தில்,  "கலைஞர் கருணாநிதி பிறவிப் போர்க்குணம் கொண்டவர். அவர் மீண்டும் வருவார். நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் திரும்புவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x