ஊடக செய்திகள் கண்காணிப்பு மையம் அமைக்கிறது மகாராஷ்டிர மாநில அரசு
செய்திகளின் உள்ளடக்கத்தை கண்காணிப்பதற்காக மகாராஷ்டிர அரசு சார்பில் ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் மகாராஷ்டிர அரசு தொடர்பாக வெளியாகும் செய்திகளின் உள்ளடக்கத்தை கண்காணிப்பதற்காக ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
மகாராஷ்டிர அரசு தொடர்பாக அனைத்து ஊடகங்களிலும் வெளியாகும் உண்மையான, தவறான மற்றும் எதிர்மறையான செய்திகளை இந்த மையம் சேகரித்து பகுப்பாய்வு செய்யும். அதன் அடிப்பையில் உண்மை அறிக்கையை தயார் செய்யும். தவறான மற்றும் எதிர்மறையாக செய்திகளுக்கு விரைவாக விளக்கம் அளிக்கப்படும்.
சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சி காரணமாக இந்த மையத்துக்கான தேவை உணரப்பட்டது.
மேலும் அரசின் திட்டங்கள், கொள்கைகள் தொடர்பான செய்திகள் எவ்வாறு வெளியிடப்படுகின்றன என்பதை ஒரே குடையின் கீழ் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த மையம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். இந்த மையத்தை தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் கையாளும். இவ்வாறு மகாராஷ்டிர அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
