Published : 03 Jul 2018 08:23 AM
Last Updated : 03 Jul 2018 08:23 AM
மாநிலங்களவை துணைத் தலைவரை ஒருமனதாக தேர்வு செய்வது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர்களை அமைச்சர் விஜய் கோயல் சந்திக்கவுள்ளார்.
மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்நிலை யில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரான விஜய் கோயல் நேற்று முன்தினம் மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்தார்.
அப்போது நாயுடுவிடம், “நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதில் மத்திய அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியுள்ளேன். மாநிலங்களவை புதிய துணைத் தலைவருக்கான தேர்தலை அரசு இயன்றவரை விரைவாக நடத்த விரும்புகிறது. என்றாலும் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்த பிறகு இதற்கான தேதி முடிவு செய்யப்படும்” என்று கோயல் தெரிவித்தார்.
இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவரை ஒருமனதாக தேர்வு செய்வது தொடர்பாக, வரும் மழைக்கால கூட்டத் தொடருக்கு முன், எதிர்க்கட்சித் தலைவர்களை விஜய் கோயல் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பி.ஜே.குரியனுக்கு நேற்று முன்தினம் நடந்த பிரிவு உபச்சார விழாவில் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெங்கய்ய நாயுடு கூறும்போது, “மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு பொருத்தமான நபரை ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக தேர்வு செய்வார்கள் என நம்புகிறேன். இது தொடர்பாக இரு தரப்பு தலைவர்களிடமும் நான் பேசியுள்ளேன்” என்றார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் 6 அவசரச் சட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்படும் என விஜய் கோயல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT