Published : 02 Mar 2025 06:03 AM
Last Updated : 02 Mar 2025 06:03 AM
டேராடூன்: உத்தராகண்டில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்கள் 55 பேர் கடும் பனிச்சரிவில் சிக்கிய சம்பவத்தில் 50 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சிய 5 பேரை மீட்கும் பணி நீடிக்கிறது. இதற்கிடையில் மீட்கப்பட்டவர்களில் 4 பேர் நேற்று உயிரிழந்தனர்.
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,200 மீட்டர் உயரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று முன்தினம் காலை 5.30 மணி முதல் 6 மணி வரை கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) முகாம் புதையுண்டதில் அதில் தங்கியிருந்த 55 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து உயர்ந்த மலைப் பகுதியில் மீட்புப் பணியில் பயிற்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட வீரர்களை ராணுவம் அங்கு அனுப்பியது. சமோலி, டேராடூன் உள்ளிட்ட இடங்களில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் அங்கு விரைந்தனர். இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) மற்றும் பிஆர்ஓ குழுவும் மீட்பு பணியில் இணைந்து கொண்டது.
பனிப்புயல் உள்ளிட்ட சவாலான வானிலைக்கு மத்தியில் மீட்புப் புணி நடைபெற்றது. இப்பணி நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது.
இதில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மனா கிராமத்தில் உள்ள ஐடிபிபி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிறகு இவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் 4 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய 5 தொழிலாளர்களை தேடும் பணி அங்கு தொடர்கிறது.
இதற்கிடையில் பிஆர்ஓ தொழிலாளர்கள் சிகிச்சை பெறும் ராணுவ மருத்துவமனைக்கு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று சென்று அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT