Published : 30 Jul 2018 11:46 AM
Last Updated : 30 Jul 2018 11:46 AM

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு: 40 லட்சம் பேர் விடுபட்டதால் சர்ச்சை

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அசாமில் 3.29 கோடி மக்கள் வசிக்கின்றனர். அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அசாம் மக்களோடு மக்களாக அவர்கள் கலந்து வசித்து வருவதால் அதிகாரிகளுக்கு அவர்களை இனம் பிரிப்பதில் சிக்கல் உள்ளது.

இதைத் தடுப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. இதற்காக அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் உறுதி செய்தல் என பல முறைகளில் அசாம் மாநில அதிகாரிகள் இந்த பதிவேட்டைத் தயார் செய்தனர்.

இதன் வரைவு பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. இதில், ஏராளமானோர் பெயர் விடுபட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், தலைவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் விடுபட்டதாக கூறப்பட்டது.

அசாம் மாநில அரசு தயாரித்து வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியலில் வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்களின் பெயர்களை சேர்க்கும் முயற்சியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக அதன் கூட்டணிக் கட்சியான அசாம் கண பரிஷத் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவுப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அசாம் மாநிலத்தில் 3.29 கோடி பேர் வசித்து வரும் நிலையில், 2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மொத்தம் 40 லட்சம் பேரின் பெயரகள் இந்த பட்டியலில் விடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வங்கதேசத்தவர்களா அல்லது இந்திய குடிமக்கள் பெயர் விடுபட்டுள்ளதா என்ற விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த பட்டியலில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் இது வரைவு வாக்காளர் பட்டியல் மட்டுமே நியாயமான நபர்களின் பெயர்கள் விடுபட்டு இருந்தால், அவர்கள் பெயர் மீண்டும் சேர்க்கப்படும் என அசாம் மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x