அமிர்தசரஸ் வந்த 2-வது விமானத்தில் பெண்களும் குழந்தைகளும் விலங்கிப்படவில்லை: தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதி

அமிர்தசரஸ் வந்த 2-வது விமானத்தில் பெண்களும் குழந்தைகளும் விலங்கிப்படவில்லை: தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதி
Updated on
1 min read

அமெரிக்காவில் இருந்த நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன் கடந்த சனிக்கிழமை இரவு அமிர்தசரஸ் வந்த இரண்டாவது விமானத்தில் பெண்களும் குழந்தைகளும் விலங்கிடப்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதி செய்தன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி அமெரிக்காவில் இருந்து 104 இந்தியர்களுடன் முதல் விமானம் கடந்த 5-ம் தேதி அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இவர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து 112 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் கடந்த 15-ம் தேதி சனிக்கிழமை இரவு அமிர்தசரஸ் வந்தது. இதிலும் இந்தியர்கள் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இரண்டாவது விமானத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் விலங்கிடப்படவில்லை, அவர்கள் கைதிகளை போல நடத்தப்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதி செய்தன.

முன்னதாக கடந்த சனிக்கிழமை பஞ்சாப் முதல்வர் பகவந்த் சின் மான் கூறுகையில், “அமிர்தசரஸ் அழைத்துவரப்படும் இந்தியர்கள் முறையாக நடத்தப்படுவார்கள். அவர்கள் தங்கள் மாநிலத்துக்கு புறப்பட்டுச் செல்லும் முன் இங்கு சில மணி நேரம் தங்கலாம். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

நாடு கடத்தப்படும் இந்தியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து மத்திய அரசை முதல்வர் பகவந்த் மான் கடுமையாக விமர்சித்தார். மேலும் இந்த விமானங்கள் தரையிறங்க அமிர்தசரஸை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி அறிவித்தார்.

இது தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறுகையில், “அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு சேர்க்கும் முகவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். எனவே ஆட்கடத்தல் தொடர்பான ஒட்டுமொத்த அமைப்புக்கு எதிராக நாம் போரிட வேண்டும். இதற்கு ட்ரம்ப் ஒத்துழைப்பு அளிப்பார் என நம்புகிறேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in