Published : 08 Feb 2025 07:20 AM
Last Updated : 08 Feb 2025 07:20 AM
ஹைதராபாத்: தெலங்கானாவில் ஒரே காவல் நிலையத்தில் குரு - சிஷ்யை பணியாற்றி வருவது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்கானாவின் விகாராபாத் மாவட்டம், சவுத்ரிகூடா கிராமத்தை சேர்ந்தவர் லால்யா நாயக். எம்.ஏ. பி.எட் வரை படித்த இவர் விகாராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது அதே கல்லூரியில் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஜபீனா பேகம் எனும் மாணவி இண்டர்மீடியட் படிக்க சேர்ந்தார். அவருக்கு லால்யா நாயக் தனது ஊதியத்தில் இருந்து கட்டணம் கட்டினார்.
நன்றாக படிக்க அவரை ஊக்குவித்தார். ஒரு கட்டத்தில் ஜபீனா வீட்டில் அவருக்கு திருமண முயற்சி மேற்கொண்டபோது, அதனை தடுத்து நிறுத்தி ஜபீனாவை தொடர்ந்து படிக்க வைத்தார்.
இதனிடையே கரோனா பெருந்தொற்று காலத்தில் வேலையை இழந்த லால்யா நாயக் பிறகு போலீஸ் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தற்போது மொய்னாபாத் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இதனிடையே பட்டப்படிப்பை முடித்த ஜபீனா பேகம் 2024-ல் எஸ்ஐ தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஓராண்டு பயிற்சிக்கு பிறகு மொய்னாபாத் காவல் நிலையத்தில் பணி நியமனம் பெற்றார்.முதல் நாள் எஸ்ஐ சீருடையில் வந்த ஜபீனா பேகத்தை பார்த்து லால்யா நாயக் இன்ப அதிர்ச்சி அடைந்தார். என்றாலும் சல்யூட் அடித்து அவரை உற்சாகத்துடன் வரவேற்றார். பிறகு அவருடன் தனது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். ஜபீனா பேகமும் தனது ஆசிரியர் லால்யா நாயக்கை பார்த்து மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார்.
தான் படிப்பு சொல்லிக் கொடுத்து, படிக்க வைத்த ஒரு பெண், தனக்கு அதிகாரியாக வந்ததை பெருமையாக கருதுவதாக லால்யா நாயக் கூறினார். குரு - சிஷ்யையான இவர்களது வீடியோ தெலங்கானா, ஆந்திராவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT