Published : 08 Feb 2025 07:20 AM
Last Updated : 08 Feb 2025 07:20 AM

ஒரே காவல் நிலையத்தில் குரு - சிஷ்யை: தெலங்கானாவில் ருசிகரம்

எஸ்ஐ ஜபீனா பேகத்துடன் காவலர் லால்யா நாயக்

ஹைதராபாத்: தெலங்​கானா​வில் ஒரே காவல் நிலை​யத்​தில் குரு - சிஷ்யை பணியாற்றி வருவது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்​தில் வைரலாகி வருகிறது.

தெலங்​கானா​வின் விகாராபாத் மாவட்​டம், சவுத்​ரி​கூடா கிராமத்தை சேர்ந்​தவர் லால்யா நாயக். எம்.ஏ. பி.எட் வரை படித்த இவர் விகாரா​பாத்​தில் உள்ள தனியார் கல்லூரி​யில் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது அதே கல்லூரி​யில் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஜபீனா பேகம் எனும் மாணவி இண்டர்​மீடியட் படிக்க சேர்ந்​தார். அவருக்கு லால்யா நாயக் தனது ஊதியத்​தில் இருந்து கட்டணம் கட்டி​னார்.

நன்றாக படிக்க அவரை ஊக்கு​வித்​தார். ஒரு கட்டத்​தில் ஜபீனா வீட்​டில் அவருக்கு திருமண முயற்சி மேற்​கொண்​ட​போது, அதனை தடுத்து நிறுத்தி ஜபீனாவை தொடர்ந்து படிக்க வைத்​தார்.

இதனிடையே கரோனா பெருந்​தொற்று காலத்​தில் வேலையை இழந்த லால்யா நாயக் பிறகு போலீஸ் காவலர் தேர்​வில் தேர்ச்சி பெற்​றார். தற்போது மொய்​னாபாத் காவல் நிலை​யத்​தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே பட்டப்​படிப்பை முடித்த ஜபீனா பேகம் 2024-ல் எஸ்ஐ தேர்​வில் தேர்ச்சி பெற்​றார். ஓராண்டு பயிற்சிக்கு பிறகு மொய்​னாபாத் காவல் நிலை​யத்​தில் பணி நியமனம் பெற்​றார்.முதல் நாள் எஸ்ஐ சீருடை​யில் வந்த ஜபீனா பேகத்தை பார்த்து லால்யா நாயக் இன்ப அதிர்ச்சி அடைந்​தார். என்றாலும் சல்யூட் அடித்து அவரை உற்சாகத்​துடன் வரவேற்​றார். பிறகு அவருடன் தனது மகிழ்ச்​சியை பரிமாறிக்​கொண்​டார். ஜபீனா பேகமும் தனது ஆசிரியர் லால்யா நாயக்கை பார்த்து மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார்.

தான் படிப்பு சொல்​லிக் கொடுத்து, படிக்க வைத்த ஒரு பெண், தனக்கு அதிகாரியாக வந்ததை பெரு​மையாக கருது​வதாக லால்யா நாயக் கூறினார். குரு - சிஷ்யையான இவர்​களது வீடியோ தெலங்​கானா, ஆந்​திரா​வில் சமூக வலை​தளங்​களில்​ வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x