Published : 08 Feb 2025 07:10 AM
Last Updated : 08 Feb 2025 07:10 AM
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.
கடந்த 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அன்றிரவு வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளில், பாஜக அமோக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளும் ஆம் ஆத்மிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று பெரும்பாலான ஊடகங்களின் கருத்துக் கணிப்பில் கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் கடந்த 6-ம் தேதி டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிட்ட கட்சிக்கு (பாஜக) 55 இடங்கள் கிடைக்கும் என்று சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் கடந்த 2 மணி நேரத்தில் ஆம் ஆத்மியின் 16 வேட்பாளர்களுக்கு செல்போனில் அழைப்புகள் வந்துள்ளன. ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறி குறிப்பிட்ட கட்சியில் இணைந்தால் ரூ.15 கோடி தருகிறோம். அமைச்சர் பதவி தருகிறோம் என்று பேரம் பேசப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட கட்சிக்கு 55 இடங்கள் கிடைக்கும் என்றால் ஆம் ஆத்மி வேட்பாளர்களிடம் ஏன் பேரம் பேச வேண்டும். பொய்யான கருத்துக் கணிப்புகளை நடத்தி எங்களது வேட்பாளர்களை இழுக்க முயற்சி நடக்கிறது. என்ன செய்தாலும் ஆம் ஆத்மியின் ஒரு வேட்பாளரைகூட இழுக்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டது.
ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் சிலரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதுகுறித்து பாஜக சார்பில் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மூத்த தலைவர் முகேஷ் குமார் அஹ்லாவத் வீடுகளுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சென்றனர். கேஜ்ரிவால் வீட்டில் இல்லாத சூழலில், அவரது வழக்கறிஞர் குழுவுடன் போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சஞ்சய் சிங் மற்றும் முகேஷ் குமார் அஹ்லாவத் ஆகியோர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறும்போது, “கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெறும்" என்று தெரிவித்தன.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த சூழலில் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT