

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கு இந்த ஆண்டு முதன்முறையாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார்.
பஞ்சபூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயில் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு ராகு-கேது சர்ப தோஷ நிவாரண பூஜை மிகவும் பிரசித்தமானது. தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருவது வழக்கம். இங்கு பக்த கண்ணப்ப நாயனாருக்கு தனி கோயிலும் இங்குள்ளது.
இக்கோயிலில் வரும் 21-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதில் முதன்முறையாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதமாக வரும் 25-ம் தேதி அல்லது மகாசிவராத்திரியான 26-ம் தேதி ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார். முதல்வரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.