

வங்கதேசத்தில் கோயில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்துக்கள் 23 பேர் உயிரிழந்தனர் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் அளித்த பதிலில் கூறியதாவது:
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியேறியது முதல் அங்குள்ள சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வங்கதேச அரசிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. அங்குள்ள சிறுபான்மையினர் பாதுகாக்கவும் வலியுறுத்தியுள்ளது. 1254 சம்பவங்கள் குறித்து போலீஸ் விசாரணை நடைபெறுவதாகவும், 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2 மாதங்களில் வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மீது 76 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் இந்து கோயில்கள் மீது நடத்தப்பட்ட 152 தாக்குதல் சம்பவங்களில் இந்துக்கள் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு மத்திய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்தார்.