

பாஜக மூத்த தலைவரும் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் அறங்காவலருமான காமேஷ்மர் சவுபால் (68) நேற்று காலமானார்.
பிஹாரின் சுபால் மாவட்டத்தை சேர்ந்த காமேஷ்வர் சவுபால் 1989-ம் ஆண்டு ராம ஜென்மபூமி இயக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். 1989-ம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் அயோத்தி ராமர் கோயிலுக்கான முதல் அடிக்கல்லை நாட்டினார். இதற்காக, முதல் கரசேவகர் என ஆர்எஸ்எஸ் அமைப்பால் கவுரவிக்கப்பட்டார்.
இவர் கடந்த 2002 முதல் 2014 வரை பிஹார் சட்டமேலவையில் பாஜக உறுப்பினராக பணியாற்றினார். 2014 மக்களவை தேர்தலில் இவர் தோல்வியுற்றாலும் தேசிய அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருந்து வந்தார்.
நீண்ட காலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த இவர், டெல்லி தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “காமேஷ்வர் சவுபால் மறைவால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். அர்ப்பணிப்புள்ள ராம பக்தராக அவர் திகழ்ந்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அளப்பரிய பங்களிப்பை செய்துள்ளார். விளிம்புநிலை சமூகங்களின் நலனுக்கான அவரது பணிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்” என்று கூறியுள்ளார்.