

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி அவசரநிலை காலத்தில் பேச்சுரிமையை நசுக்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த சில தினங்களாக மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: குடியரசுத் தலைவரின் உரை நமக்கு உத்வேகம் அளிப்பதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அத்துடன் நாம் அனைவரும் முன்னோக்கி செல்வதற்கான வழியையும் காட்டியது. இது தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
‘நம் அனைவருடைய வளர்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்’ என்பதுதான் இந்த அரசின் குறிக்கோள். எனவேதான், நாம் இந்த இடத்தில் இருப்பதற்கான வாய்ப்பை நாட்டு மக்கள் வழங்கி உள்ளனர். குடும்பம்தான் முதல் என்பது காங்கிரஸ் கட்சியின் மாதிரி. அக்கட்சிக்கு ‘நம் அனைவருடைய வளர்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்’ என்ற முழக்கத்தில் நம்பிக்கை இல்லை. இது அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. இதை அவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு.
நாட்டு மக்கள் நமது வளர்ச்சி மாதிரியை பரிசோதித்து, புரிந்துகொண்டு ஆதரித்துள்ளனர். தேசத்துக்கே முன்னுரிமை என்பது நமது வளர்ச்சிக்கான மாதிரி ஆகும். காங்கிரஸ் ஆட்சியின்போது, அனைத்து தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதுதான் அவர்களுடைய அரசியல் மாதிரி. கடந்த 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.
எனது தலைமையிலான மத்திய அரசு, விளிம்புநிலை மக்களுக்கு (ஓபிசி), பெண்கள் மற்றும் திருநங்கைகள் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி சமூகத்தில் சாதி எனும் விஷத்தை பரப்புகிறது. ஒரு காலத்தில் பாபாசாஹிப் அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெறுப்பை பரப்பியது. அவருக்கு எதிராக சதி செய்தது. அவருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது பற்றிகூட பரிசீலிக்கவில்லை. ஆனால், இப்போது ‘ஜெய் பீம்’ என்று முழங்க வேண்டிய நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்துக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் மரியாதை கொடுக்கவில்லை. ஆனால் இன்று நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு மரியாதை கொடுத்து, அவர்களிடமிருந்து உத்வேகம் பெற்று நாம் முன்னேறி வருகிறோம். காங்கிரஸ் கட்சி அதிகாரத்துக்காக அவசரநிலையை பிரகடனம் செய்தது. இதை நாடே அறியும். அவசரநிலை அமலில் இருந்தபோது, அரசியல் சாசனம் எப்படி அவமதிக்கப்பட்டது, பேச்சுரிமை எப்படி நசுக்கப்பட்டது என்பதைப் பார்த்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.