ஆந்திர அமைச்சர்களின் ‘ரேங்க்’ பட்டியலில் 6-வது இடத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர அமைச்சர்களின் ‘ரேங்க்’ பட்டியலில் 6-வது இடத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு
Updated on
1 min read

ஆந்திராவில் சிறந்த முறையில் பணியாற்றி, கோப்புகளை சரிபார்த்து உடனுக்குடன் பணிகளை முடிக்கும் சிறந்த அமைச்சர்களின் பட்டியலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவே நேற்று வெளியிட்டார். இதில் அவர் 6-ம் இடத்தில் உள்ளார்.

அமராவதியில் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடாது, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக விரைவில் நிறைவேற்ற வேண்டும் , அரசு ஆசிரியர் பணி இடங்கள் உட்பட 7.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் தேர்தல் வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துறை ரீதியாக அனைத்து அமைச்சர்களும் தங்களின் பணிகளை விரைவாக அதே சமயத்தில் சாமர்த்தியமாக செய்து முடிக்க வேண்டும் என்றும், மக்களிடம் சென்று அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மதிய உணவு திட்டம் தங்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் உணவு போல் இருத்தல் அவசியம், உயர்தர அரிசியையே இலவச மதிய உணவு திட்டத்திற்கு உபயோகப்படுத்த வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.

இதற்கிடையே கடந்த 9 மாதங்களாக சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்களின் பட்டியலையும் அவரே வெளியிட்டார். அதன்படி, முதல் இடத்தில் எஸ்எம்டி ஃபரூக் இடம்பெற்றார். 6-ம் இடத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், 8-ம் இடத்தில் அவரது மகன் லோகேஷும், 10-ம் இடத்தில் துணை முதல்வர் பவன் கல்யாணும், சுபாஷ் கடைசி இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in