

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி 6.75 லட்சம் இந்தியர்கள் இருப்பதாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுதீன் ஒவைசி கூறினார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருந்ததாக கூறி 104 இந்தியர்களை அமெரிக்க அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. அவர்கள் கை விலங்கிட்டு அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத் எம்.பி.யும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசதுதீன் ஒவைசி நேற்று கூறியதாவது: 2022-ம் ஆண்டு பியூ ஆய்வு நிறுவன அறிக்கையின்படி, அமெரிக்காவில் ஆவணமற்ற இந்தியர்கள் இன்னும் 6,75,000 பேர் உள்ளனர். மேலும் 18,000 பேர் இன்னும் இறுதிப் பட்டியலில் உள்ளனர். இவர்கள் அனைவரும் திரும்பி வரும்போது, அது இந்தியாவுக்கு வரும் பண அளவையும் பாதிக்கும். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்,
மோடி இந்தியாவின் பெயரை உயர்த்தி, அதை ஒரு வல்லரசாக மாற்றியுள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால் இப்போது என்ன நடக்கிறது? அவர்கள் ஏன் இவ்வளவு அவமரியாதையான முறையில் கொண்டு வரப்படுகின்றனர்?
இது இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மையின் அளவை பிரதிபலிக்கிறது. நாட்டில் 45 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இதனால் இவர்கள் முகவர்களால் ஈர்க்கப்பட்டு பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். இவ்வாறு ஒவைசி கூறினார்.