மக்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மக்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் சிறிது நேரம் வெளிநடப்பு செய்தனர். நேற்று காலை 11 மணிக்கு மக்களவையில், பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசத் தொடங்கினார்.

அப்போது எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி, மத்திய அமைச்சரை பேச விடாமல் செய்தனர். தொடர்ந்து கோஷம் எழுப்பிய அவர்கள், கும்பமேளாவில் நடந்த நெரிசல் தொடர்பாக விவாதிக்கவேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். சுமார் 5 நிமிடங்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கோஷமிட்டபடியே வெளிநடப்பு செய்தனர்.

அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் 10 நிமிடங்கள் கழித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவைக்குத் திரும்பி அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். ஆனால் இந்த வெளிநடப்பில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in