

புதுடெல்லி: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று (பிப்.1) காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுபோல் வருமான வரி உச்ச வரம்பில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். இது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு: புதிய வருமான வரி விதிப்பு முறையின்படி வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன், கூடுதலாக ரூ.75,000 கழிவும் கிடைக்கும். இந்த வருமான வரி விலக்கு உயர்வின் மூலம் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும், இது நுகரும் சக்தியை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரூ.12 லட்சம் என்ற வருமான வரி விலக்கு உச்ச வரம்புக்கு மேலாக ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கான வரிகள் விவரம்:
ரூ.4 லட்சம் வரை - வரி இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5% வரி
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10% வரி
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை - 15% வரி
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை - 20% வரி
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை - 25% வரி
ரூ.24 லட்சத்துக்கு மேல் 30% வரி
வருமான வரி தொடர்பாக வெளியான இதர முக்கிய அறிவிப்புகள்: புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். வருமான வரி தாக்கல் செய்யப்படுதல் எளிதாக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரை வரி பிடித்தம் கிடையாது. தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் நடுத்தர வர்க்கத்தினர் நலனை சார்ந்ததாக இருக்கும். வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் (TDS) பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. வாசிக்க > மத்திய பட்ஜெட் 2025 - முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?