Published : 31 Jan 2025 03:24 AM
Last Updated : 31 Jan 2025 03:24 AM
மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்றும், யுஜிசி பிரதிநிதியுடன் பல்கலைக்கழக வேந்தர் அமைத்த தேடுதல் குழுவை ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர், அப்பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை நியமித்துள்ளார். காமராஜர் பல்கலைக்கழக விதிமுறைகள் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் யுஜிசி விதிமுறைகளின் அடிப்படையில் அந்த தேடுதல் குழுவில் வேந்தரின் பிரதிநிதி, தமிழக அரசின் பிரதிநிதி, செனட் பிரதிநிதி, யுஜிசி பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அந்த தேடுதல் குழு நியமனம் தொடர்பான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு கடந்த டிசம்பர் 16-ம் தேதி ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், காமராஜர் பல்கலைக்கழக தேடுதல் குழு தொடர்பான அரசாணையை தமிழக அரசின் உயர் கல்வித்துறை ஜனவரி 9-ம் தேதி வெளியிட்டிருக்கிறது. அந்த அரசாணையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி, வேண்டுமென்றே யுஜிசி பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளார்.
யுஜிசி விதிமுறைகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழுவின் பரிந்துரைப்படிதான் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் பி.எஸ்.ஸ்ரீஜித்- டாக்டர் எம்எஸ்.ராஜஸ்ரீ வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. எனவே, யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டிருப்பது யுஜிசி விதிமுறைகளுக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் முரணானது.
எனவே, காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை நியமித்து வெளியிட்ட அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும், யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தர் நியமித்த தேடுதல் குழு தொடர்பான அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT