Published : 28 Jan 2025 01:11 AM
Last Updated : 28 Jan 2025 01:11 AM

மகா கும்பமேளா புகைப்படம்: நாசா வெளியீடு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த 13-ம் தேதிமுதல் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து புனித நீராடி வருகின்றனர். வரும் பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த புனித நீராடும் நிகழ்ச்சியில் சுமார் 45 கோடி பக்தர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் , விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலைய (நாசா) விண்வெளி வீரரான டான் பெட்டிட் என்பவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” கங்கை நதி யாத்திரையாக நடைபெறும் 2025 மகா கும்பமேளா நிகழ்ச்சி இரவில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பார்க்கும்போது ஒளிர்கிறது. உலகில் அதிகளவில் மனிதர்கள் கூடும் இந்த விழா நன்றாக ஒளிர்கிறது” என்று தெரிவித்து 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம், கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்லும் விழா சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x