Published : 28 Jan 2025 01:11 AM
Last Updated : 28 Jan 2025 01:11 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த 13-ம் தேதிமுதல் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து புனித நீராடி வருகின்றனர். வரும் பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த புனித நீராடும் நிகழ்ச்சியில் சுமார் 45 கோடி பக்தர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் , விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலைய (நாசா) விண்வெளி வீரரான டான் பெட்டிட் என்பவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” கங்கை நதி யாத்திரையாக நடைபெறும் 2025 மகா கும்பமேளா நிகழ்ச்சி இரவில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பார்க்கும்போது ஒளிர்கிறது. உலகில் அதிகளவில் மனிதர்கள் கூடும் இந்த விழா நன்றாக ஒளிர்கிறது” என்று தெரிவித்து 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம், கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்லும் விழா சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT