தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: கேரளாவில் 57 பேர் கைது

தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: கேரளாவில் 57 பேர் கைது
Updated on
1 min read

கேரளாவில் தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 59 பேரில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமி ஒருவர் அங்குள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் படித்து வருகிறார். அவரது நடத்தையில் மாற்றம் காணப்பட்டதை தொடர்ந்து அவருக்கு குழந்தைகள் நல குழுவினர் கவுன்சிலிங் அளித்தனர். அப்போது தனது 13 வயது முதல் தன்னை 62 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறி அச்சிறுமி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதையடுத்து அவரது புகார் தொடர்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரி அஜிதா பேகம் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

விசாரணையில், "கடந்த ஆண்டு அச்சிறுமி 12-ம் வகுப்பு படிக்கும்போது இன்ஸ்டாகிராமில் நெருக்கமான இளைஞர் ஒருவர் அவரை ரப்பர் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பத்தனம்திட்டா தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து அச்சிறுமியை பலர் பல்வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அச்சிறுமி 5 முறை கும்பல் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்" எனத் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை கண்காணித்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஜி.வினோத் குமார் கூறியதாவது: இந்த விவகாரத்தில் முதல் வழக்கு இலவம்திட்டா காவல் நிலையத்தில் கடந்த 10-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. விரிவான விசாரணைக்கு பிறகு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 59 பேரில் வெளிநாட்டில் இருக்கும் இருவரை தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை காலை 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 4 காவல் நிலையங்களில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகளில் 5 சிறுவர்களும் அடங்குவர். விசாரணையை முடித்து, குற்றப் பத்திரிகையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே காவல் துறையின் நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in