Published : 20 Jan 2025 10:25 PM
Last Updated : 20 Jan 2025 10:25 PM
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்-க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: “ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவரின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், இன்றைய தீர்ப்பில், இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்
இது உண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய அரிதான வழக்கு என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என்ற முடிவுக்கு எவ்வாறு வரமுடிந்தது? இந்த கொடூரமான வழக்கில் மரண தண்டனையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
சமீப காலங்களில் இதுபோன்ற குற்றங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை/அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய முடிந்தது. ஆனால், இந்த வழக்கில், மரண தண்டனை ஏன் வழங்கப்படவில்லை? இது மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்கள் இப்போது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் (31) கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
பெண் மருத்துவரின் கண்கள், உதடு, கழுத்து, வயிறு, தோள்பட்டை, விரல்கள், பிறப்பு உறுப்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த கொடூர கொலை தொடர்பாக, காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கை முதலில் மேற்குவங்க போலீஸார் விசாரித்தனர். மாநில போலீஸாரின் விசாரணை குறித்து மருத்துவ மாணவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து மேற்குவங்க உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் 81 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 50 பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி சிபிஐ தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ மாணவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 9-ம் தேதி அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி அனிபர் தாஸ் கடந்த 18ம் தேதி தீர்ப்பினை வழங்கினார். அப்போது, சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
திங்கள்கிழமை மதியம் 2.45 மணிக்கு நீதிபதி அளித்த தீர்ப்பில், "குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதன்மூலம் அவர் தனது வாழ்வின் கடைசி நாள் வரை சிறையில் இருப்பார். மேலும் அவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல.
கொலை செய்யப்பட்டதற்காக ரூ. 10 லட்சம், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்காக ரூ. 7 லட்சம் என மொத்தம் ரூ. 17 லட்சம் உயிரிழந்த மருத்துவரின் பெற்றோருக்கு இழப்பீடாக வழங்கப்படும்.
இந்த மரணத்தை ஈடுசெய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். அவர் ஒரு பணியில் இருந்த மருத்துவர் என்பதால் இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு. மேலும், நாங்கள் சட்டத்தால் கட்டுப்பட்டவர்கள் என்பதால் இந்த இழப்பீட்டை நாங்கள் செலுத்த வேண்டும்" என்று நீதிபதி குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT