Published : 19 Jan 2025 05:41 AM
Last Updated : 19 Jan 2025 05:41 AM
புதுடெல்லி/பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி யதற்காக. மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, சித்தராமையா, அவரது மனைவி பார்வதி மற்றும் உறவினர்கள் 2 பேர் மீது நில முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அமலாக்கத்துறை, லோக் ஆயுக்தா வும் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் பண மோசடி, விதிமீறல் நடந்திருப் பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. பார்வதியிடம் இருந்து பெற்ற நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.3.2 லட்சம். அதற்கு பதிலாக அவருக்கு ஒதுக்கப்பட்ட 14 வீட்டு மனைகளின் சந்தை மதிப்பு ரூ.56 கோடி. மைசூரு நகர மேம்பாட்டு கழக முன்னாள் தலைவர் நடேஷ் இவ்வாறு சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்ததால் அந்த அமைப்புக்கு இழப்பு ஏற்பட்டது.
சம்பந்தப்பட்டவர்கள் இந்த நிலத்தை அதிக லாபத்தில் விற்று, அந்த பணத்தை கணக்கில் காட்டவில்லை. இந்த பணத்தை பினாமிகள் பெயரில் முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளளன. இதற்காக மைசூரு நகர மேம்பாட்டு கழக தலைவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ரூ.300 கோடி மதிப்பிலான 143 அசையா சொத்துகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறும்போது. “நில ஒதுக்கீடு விவகாரத்தில் எனது தலையீடு எதுவும் இல்லை. நான் விதிமீறலில் ஈடுபடவில்லை. என்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயற்சி நடக்கிறது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT