Published : 13 Jan 2025 02:26 AM
Last Updated : 13 Jan 2025 02:26 AM
புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாவோயிஸ்ட்கள் மறைத்து வைத்திருந்த வெடிபொருள் வெடித்து சிதறியது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் படை வீரர் ஒருவர் அதில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் பிஜப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் அந்த இடத்தில் நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள், வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
உஷாரடைந்த சிஆர்பிஎப் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் இருந்து தானியங்கி துப்பாக்கிகள், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏராளமாக கைப்பற்றப்பட்டன. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக சிஆர்பிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை சுக்மா - பிஜப்பூர் எல்லையில் மாவோயிஸ்ட்கள் வைத்த கண்ணிவெடிகள் வெடித்து 8 வீரர்கள் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடந்த என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்தும் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிட்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT