ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் மகா கும்பமேளாவில் பங்கேற்கிறார்

ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் மகா கும்பமேளாவில் பங்கேற்கிறார்
Updated on
1 min read

பிரயாக்ராஜ்: அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் (61) பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியா வருகிறார். அவர் நிரஞ்சனி அகாராவின் மகா மண்டலேஷ்வர் சுவாமி கைலாஷ் ஆனந்த் ஜி மகராஜ் முகாமில் 17 நாட்கள் தங்கியிருக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். குறிப்பாக கல்பவாசம் மேற்கொள்ள உள்ளார்.

இதுகுறித்து கைலாஷ் ஆனந்த் கூறும்போது, “மகா கும்பமேளாவில் பங்கேற்க வரும் லாரன் பாவெல் இங்கு தியானம் செய்ய உள்ளார். அவருக்கு கமலா என நாங்கள் பெயர் வைத்துள்ளோம். அவர் எங்களுக்கு மகள் போன்றவர். அவர் இந்தியாவுக்கு வருவது 2-வது முறை ஆகும்.

லாரன் பாவெலை சாதுக்கள் பேரணியில் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்வோம். எனினும், இதுகுறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த பயணத்தின்போது பல்வேறு ஆன்மிக குருக்களை அவர் சந்திப்பார்.

இது மதம் தொடர்பான விழா. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த விழாவுக்கு வந்து ஆசி பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in