1984 சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 88 பேருக்கு வேலைவாய்ப்பில் சலுகை

1984 சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 88 பேருக்கு வேலைவாய்ப்பில் சலுகை
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 1984-ல் நடந்த சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 88 பேருக்கு வேலைவாய்ப்பில் சலுகை தர டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி, கல்வித் தகுதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல வயது வரம்பு 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பணியில் பல்நோக்கு திறன் ஊழியர் (எம்டிஎஸ்) பணிக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக, கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி மத்திய உள் துறை அமைச்சகம் ஒரு மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்தியது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. இதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கு முறையான கல்வித் தகுதி இல்லை.

அதேநேரம் வயதும் நிர்ணயிக்கப்பட்டதைவிடு கூடுதலாக இருந்தது. இதைப் பரிசீலிக்கக் கோரி டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குழுக்களின் பிரதிநிதிகள் சார்பில் துணைநிலை ஆளுநரிடம் பல்வேறு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in