ஆம்புலன்ஸ் குலுங்கியதில் இறந்தவர் உயிர் பிழைத்தார்: மகாராஷ்டிராவில் அதிசய சம்பவம்

ஆம்புலன்ஸ் குலுங்கியதில் இறந்தவர் உயிர் பிழைத்தார்: மகாராஷ்டிராவில் அதிசய சம்பவம்
Updated on
1 min read

மாரடைப்பால் இறந்த ஒருவர் ஆம்புலன்ஸ் குலுங்கியதில் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டம், கசாபா-பவாடா பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங் உல்பே. 65 வயதாகும் இவருக்கு கடந்த டிசம்பர் 16-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து பாண்டுரங் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் வீட்டுக்கு எடுத்து வந்தனர். அதற்குள் உறவினர்களுக்கு தகவல் தெரிந்து, பாண்டுரங் வீட்டில் துக்கத்திற்காக கூடிவிட்டனர்.

இந்நிலையில் ஒரு வேகத்தடையை கடந்தபோது ஆம்புலன்ஸ் குலுங்கியதில் பாண்டுரங்கின் கை விரல்கள் அசைந்ததை அவரது மனைவி பார்த்தார். இதையடுத்து பாண்டுரங் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து 2 வார மருத்துவ சிகிச்சைக்கு பிறகு பாண்டுரங் கடந்த திங்கட்கிழமை நடந்தே வீட்டுக்கு திரும்பினார்.

நடந்த சம்பவம் குறித்து பாண்டுரங் கூறும்போது, “கடந்த 16-ம் தேதி நடைப்பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியவுன் டீ குடித்துவிட்டு அமர்ந்திருந்தேன். அப்போது எனக்கு மயக்கமும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. பாத்ரூம் சென்று வாந்தி எடுத்தேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. என்னை யார் மருத்துவனைக்கு கொண்டு சென்றார்கள் என்பதும் எனக்குத் தெரியாது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in