விவசாயி உடல்நிலை பாதித்த விவகாரம்: பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

விவசாயி உடல்நிலை பாதித்த விவகாரம்: பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, விவசாயிகள் எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பிரதிநிதி ஜெகஜித் சிங் தல்லிவால் (70), கன்னவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த நவம்பர் 26-ம் தேதி தொடங்கினார். ஒரு மாதத்தைக் கடந்த இந்தப் போராட்டம் தொடர்கிறது. அவருடைய உடல்நிலை மோசமாகி வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு கடந்த டிசம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, அதிகாரிகள் ஜெகஜித் சிங்கை மருத்துவமனையில் சேர்க்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் சுதான்ஷு துலியா முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் குர்மிந்தர் சிங், “அதிகாரிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஜெகஜித் சிங்கை சந்தித்து மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தை அழைத்தால் மட்டுமே மருத்துவமனைக்கு வருவேன் என கூறிவிட்டார். இது தொடர்பாக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எனவே, ஜெகஜித் சிங்கை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த மேலும் 3 நாள் அவகாசம் வழங்க வேண்டும். அவருடைய உடல்நிலையை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது” என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது பற்றி நாங்கள் கவலை அடைகிறோம். மாநில அரசின் கோரிக்கைப்படி மேலும் 3 நாள் அவகாசம் தருகிறோம். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை பற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது. இந்த வழக்கு ஜனவரி 2-ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைக்கப்படுகிறது. விசாரணையின்போது, மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவர் ஆகிய இருவரும் காணொலி மூலம் ஆஜராக வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in