ஜனவரி 10-ம் தேதிக்குள் 1.77 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை: திருப்பதியில் அமைச்சர் ஆர்.காந்தி உறுதி
திருப்பதி: பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் 1.77 கோடி பேருக்கு வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் இலவச வேட்டி மற்றும் சேலைகள் விநியோகம் செய்யப்படும் என நேற்று திருப்பதிக்கு வந்திருந்த தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
திருப்பதி காந்தி ரோட்டில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப் டெக்ஸ் கைத்தறி விற்பனை நிலையத்தை நேற்று தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக அரசின் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாது நமது அண்டை மாநிலங்களில் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 150 விற்பனை நிலையங்கள் உள்ளன. இது தவிர ஆந்திராவில் 8 மற்றும் தெலங்கானாவில் 3 விற்பனை நிலையங்களும் உள்ளன. இவை காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, கோ-ஆப்டெக்ஸ் மிகவும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனை லாபகரமாக கொண்டு செல்லவே தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காலத்திற்கு ஏற்ப தற்கால இளைஞர்களை கவரும் விதத்தில் டிசைன்கள் செய்து விற்பனை செய்யப்படுகின்றன.
பொங்கல் பண்டிகைக்காக 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 22 லட்சம் வேட்டிகளும் தயாரித்து விநியோகம் செய்யும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 51 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் இலவச சேலைகள் மற்றும் வேட்டிகள் விநியோகம் செய்யப்படும். யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை என குறை கூறாத வகையில் அவை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும்.
நான் 31 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி திருமலைக்கு வந்து விடுவேன். ஜனவரி மாதம் 1-ம் தேதி திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். இவ்வாறு தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர். காந்தி பேசினார். இந்நிகழ்ச்சியில், திருப்பதி எம்.எல்.ஏ ஆரணி ஸ்ரீநிவாசுலு, முன்னாள் எம்.எல்.ஏ சுகுணம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
