Published : 28 Dec 2024 12:47 PM
Last Updated : 28 Dec 2024 12:47 PM
புதுடெல்லி: பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராம ராவ் (கேடிஆர்) மீதான ரூ.55 கோடி நிதி மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவரைப் போலவே, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் குமார், ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் மூன்னாள் தலைமை பொறியாளர் பிஎல்என் ரெட்டி ஆகியோருக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கேடிஆர் ஜனவரி 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படியும், அரவிந்த் குமார் மற்றும பிஎல்என் ரெட்டி முறையே ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபார்முலா இ பந்தயம் வழக்கு தொடர்பாக மத்திய விசாரணை அமைப்பு கேடிஆர், மற்ற இருவர் மீது பணமோசடி வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில ஊழல் தடுப்பு போலீஸார் இந்த விவகாரம் தொடர்பாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக அமலாக்கத்துறையின் வழக்கு பதிவு ககவல் அறிக்கையில் (Enforcement Case Information Report) தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநில ஊழல் தடுப்பு போலீஸாரின் (ஏசிபி) வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் வரிசையிலேயே இந்த வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஏசிபி வழக்கில், தெலங்கானா மாநில முன்னாள் முதல்வரின் மகனான கே.டி. ராமா ராவ் முதல் குற்றவாளியாகவும், அவரைத் தொடர்ந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி குமார் மற்றும் மூத்த அரசு அதிகாரி ரெட்டி ஆகியோர் 2, 3 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆட்சியின் போது ஹைதராபாத்தில் ஃபார்முலா பந்தயத்தை நடத்துவதற்காக, கேடிஆர் அனுமதி இன்றி ரூ.55 கோடி பணத்தை வெளிநாட்டு நாணயங்களில் செலுத்திய குற்றச்சாட்டில் அவர் விசாரணையைச் சந்தித்து வருகிறார்.
தெலங்கானா ஊழல்தடுப்பு போலீஸாரின் வழக்கு குறித்து பதில் அளித்திருந்த கேடிஆர், " நாங்கள் ரூ.55 கோடி அளித்துள்ளோம் அவர்கள் (ஃபார்முலா இ) பணம் பெற்றதை அங்கீகரித்துள்ளனர். இதில் ஊழல் எங்கே உள்ளது? ஹெச்எம்டிஏவுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு உள்ளது. அந்தக் கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது. இது நேர்மையான கணக்கு" என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT