பஞ்சாப்: கால்வாயில் பேருந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

பஞ்சாப்: கால்வாயில் பேருந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பஞ்சாபின் பதிண்டா நகர் அருகே பேருந்து கால்வாயில் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர்.

பஞ்சாபின் சர்துல்கர் என்ற இடத்தில் இருந்து பதிண்டா மாநகர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, ஜிவான் சிங் வாலா என்ற கிராமத்தில் பாலத்தின் மீது மோதி பின்னர் கால்வாயில் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த நிலையில் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். காயமடைந்த 18 பயணிகள் பதிண்டா நகரில் உள்ள ஷாஹீத் பாய் மணி சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து பதிண்டா காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "சர்துல்கரில் இருந்து பதிண்டா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, மாநகர துணை ஆணையர் தலைமையில் போலீசார் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தனர். உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புப் படையும் வரவழைக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த உடனேயே, கிராம மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும், அவர்கள் உயிர்களைக் காப்பாற்றியதாகவும் பதிண்டா துணை ஆணையர் ஷோகத் அஹ்மத் பர்ரே தெரிவித்தார். விபத்து நடந்தபோது மழை பெய்து கொண்டிருந்ததாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என்றும் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in