Published : 01 Aug 2014 08:00 AM
Last Updated : 01 Aug 2014 08:00 AM
திருப்பதி ஏழுமலையானை சாதாரண பக்தர்கள் இனி 2 மணி நேரத்தில் தரிசிக்கும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இது குறித்து தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களிடம் கூறியது:
திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 65 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். மேலும் காலை சுப்ரபாத சேவை உட்பட இரவு ஏகாந்த சேவை வரை கட்டண டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்களும் தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சாதாரண பக்தர்களுக்கு தரிசனம் நேரம் அதிகரிக்கும் வகையில் தேவஸ்தானம் சில முடிவுகளை எடுக்க முன்வந்துள்ளது. இதில் முதற் கட்டமாக ரூ. 300 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யும் முறையை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் காரணமாக நாட்டில் எந்த மாநிலத்தில் இருந்தாலும் இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் இந்த தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட நாளில் சம்மந்தப்பட்ட பக்தர்கள் வெறும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக கோயிலுக்கு வந்தால் மட்டும் போதுமானது. இந்த பக்தர்கள் வெறும் இரண்டே மணி நேரத்தில் சுவாமியை தரிசிக்கலாம்.
இந்த சிறப்பு தரிசன முறையை மாற்றியது போன்று படிப்படியாக தர்ம தரிசனம், திவ்ய தரிசன (நடந்து வரும் பக்தர்களுக்காக) முறைகளும் ஆன்லைன் மயமாக்கப்படும். அதேசமயத்தில் வி.ஐ.பி. பரிந்துரை கடிதங்களை ஏற்பதும் படிப்படியாக நிறுத்தப்படும். இவ்வாறு அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT