Published : 03 Jul 2018 12:20 PM
Last Updated : 03 Jul 2018 12:20 PM

டெல்லியில் 11 பேர் தற்கொலைக்கு பின்புலத்தில் மந்திரவாதிக்கு தொடர்பா?- அதிர்ச்சித் தகவல்கள்: போலீஸார் தீவிர விசாரணை

டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மந்திரவாதி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டெல்லியின் வடிக்குப்பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்று வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தற்கொலை செய்துகொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(வயது77) தரையில் படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கி இருந்தனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ் (வயது 50), லலித் பாட்டியா (45), மகள் பிரதிபா(வயது 57). மற்றொரு மகள் இங்கு இல்லை.

பவனேஷ் மனைவி சவிதா (வயது48), சவிதாவின் மகள் மீனு (வயது 23), நிதி (25), துருவ் (15). லலித் பாட்டியாவின் மனைவி டினா (42). இவரின் 15 வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33). இவர்களுக்குக் கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் 8 பேருடைய உடற்கூறு ஆய்வு முடிந்தநிலையில், யாரும் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால், உறவினர்களோ இது தற்கொலை அல்ல, யாரோ சிலர் இதில் ஈடுபட்டுள்ளனர். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு உறவினர்கள் மூடநம்பிக்கை உள்ளவர்கள் அல்ல என்று தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையை கடவுளைச் சந்திப்பதற்காகத்தான் தற்கொலை செய்கிறோம், உடல் நிலையில்லாதது, ஆன்மா தான் நிலையானது என்ற டைரிக்குறிப்புகள் தற்கொலை செய்துகொண்டவர்கள் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டுக்குப் பக்கவாட்டில் யு வடிவத்தில் 7 பிளாஸ்டிக் குழாய்களும், 4 நேரான குழாய்களும் ஒரே இடத்தில் ஏன் பொருத்தப்பட்டிருந்தன என்ற பல்வேறு கேள்விகள் போலீஸாருக்கு எழுந்தன.

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் குடும்பத்துக்கும் காடா பாபா என்ற மந்திரவாதி ஒருவருக்கும் இடையே நல்ல தொடர்பு இருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவ்வப்போது அந்த மந்திரவாதி ஆலமரத்தில் குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் சென்று பூஜை நடத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒருவேளை இந்த மந்திரவாதி, அந்தக் குடும்ப உறுப்பினர்கள் 11 பேரையும் மூளைச்சலவை செய்து, தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியிலும் ஆலமரத்தை வழிபடுவது குறித்து குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.

ஆலமரத்தில் விழுதுகள் தொங்குவதுபோல், வீட்டில் அனைவரின் உடல்களும் தொங்கின. மேலும், அந்த டைரிக் குறிப்பில் கடவுள் ஆலமரம் போன்றவர் நாம் விழுதுகள் போல் இருக்க வேண்டும் என்ற குறிப்புகளையும், இவர்கள் விழுதுகள் போல் தூக்குப்போட்டுத் தொங்கியதையும் போலீஸார் ஒப்பிட்டுப் பார்த்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்தக் குடும்பத்தில் லலித் பாட்டியா என்பவர் மட்டும் மாந்திரீக விஷயங்களில் தீவிர ஈடுபாட்டுடன், நம்பிக்கையுடன் இருந்து வந்துள்ளார். தன்னுடைய மகனுக்கு பேச்சுவராமல் இருந்த நிலையில், அதற்கான மாந்திரீக பூஜை செய்தபின் பேச்சு வந்ததால், அதன்பின் மாந்திரீக விஷயங்களில் தீவிர நம்பிக்கை உடையவராக லலித்பாட்டியா மாறினார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், உடல்களை உடற்கூறு ஆய்வு செய்ததில், லலித் பாட்டியா, அவரின் மனைவி டினா ஆகியோர்தான் கடைசியில் தற்கொலை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவாக இருக்கும் அந்த மந்திரவாதி காடா பாபாவைத் தேடும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x