மும்பை படகு விபத்தில் காணாமல்போன 7 வயது சிறுவனின் உடல் மீட்பு

மும்பை படகு விபத்தில் காணாமல்போன 7 வயது சிறுவனின் உடல் மீட்பு

Published on

மும்பை: மும்பையின் 'கேட் வே ஆப் இந்தியா' பகுதியில் இருந்து பிரபல சுற்றுலா தலமான எலிபென்டா தீவு நோக்கி 'நீல்கமல்' என்ற சுற்றுலா படகு கடந்த புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. இப்படகில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர்.

அப்போது துறைமுகப் பகுதியில் கடற்படையின் விரைவு ரோந்துப் படகு இன்ஜின் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தது. இப்படகு திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா படகு மீது மோதியதில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்தது.

இதையடுத்து கடற்படை, கடலோர காவல் படை மற்றும் மெரைன் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் காயம் அடைந்த இருவர் உட்பட 98 பேர் மீட்கப்பட்டனர். மறுநாள் வரை 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

இவர்களில் கடற்படை மாலுமி ஒருவர், விரைவுப் படகு தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் இருவரும் அடங்குவர்.

சுற்றுலா படகில் வந்த ஜோகன் முகம்மது நிசார் அகமது பதான் என்ற 7 வயது சிறுவனை மட்டும் தேடும் பணி நீடித்தது. இந்நிலையில் 3 நாள் தேடுதலுக்கு பிறகு அச்சிறுவனின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது. இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in