ஜம்மு-காஷ்மீர் வழித்தடத்தில் மானிய கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவை

ஜம்மு-காஷ்மீர் வழித்தடத்தில் மானிய கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவை
Updated on
1 min read

உள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஜம்மு-காஷ்மீர் வழித்தடத்தில் மானிய கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவையை வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் மெந்தர் செக்டாரிலிருந்து பூஞ்ச் மற்றும் ஜம்மு பகுதிகளை இணைக்க மானிய கட்டணத்தில் ஹெலிகாப்ட்டர் சேவையினை வழங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், விமான இயக்குநர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறி்த்த ஆய்வை மேற்கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மானிய கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவை வழங்கும் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஜம்மு- காஷ்மீர் சிவில் ஏவியேஷன் துறை செயலர் அஜ்சாஜ் ஆஸாத் கூறுகையில், “ மெந்தரின் தொலைதூரப் பகுதியில் இருந்து பயணம், அவசர கால மீட்புகளை மேற்கொள்ள ஏதுவாக மானிய கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கை " என்றார்.

கிஸ்த்வர்-சவுன்டர்-நவபாச்சி, இஸான்-கிஸ்த்வர், ஜம்மு-ரஜவுரி-பூஞ்ச்-ஜம்மு, ஜம்மு- தோடா-கிஸ்த்வர்-ஜம்மு, பந்திபோரா-கன்ஸல்வான்-தவர்-நீரி-பந்திபோரா மற்றும் குப்வாரா-மச்சில்-தங்தர்-கெரன்-குப்வாரா உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பல பகுதிகளில் மானிய கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவை ஏற்கெனவே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in