மனைவியின் கண்ணியமான வாழ்க்கைக்காகவே ஜீவனாம்சம்; கணவனுக்கான அபராதம் அல்ல: சுப்ரீம் கோர்ட்

மனைவியின் கண்ணியமான வாழ்க்கைக்காகவே ஜீவனாம்சம்; கணவனுக்கான அபராதம் அல்ல: சுப்ரீம் கோர்ட்

Published on

‘‘மனைவியின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யவே ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்படுகிறது. அதை கணவனுக்கு விதிக்கப்படும் அபராதமாக கருதக் கூடாது’’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்த தம்பதி கடந்த 2004-ம் ஆண்டு பிரிந்துள்ளனர். கணவர் துபாயில் உள்ள ஒரு வங்கியின் சிஇஓ. மாதம் 50,000 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்காம் (ரூ.11 லட்சம்) சம்பளம் வாங்குகிறார். இவரது 3 அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.17 கோடி. மனைவி இல்லத்தரசி. இவர்களின் ஒரே மகன் தற்போது இன்ஜினியரிங் முடித்துள்ளார்.

விவாகரத்து கோரி தம்பதி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பி.பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கேமிராவில் கணவன் மற்றும் மனைவியுடன் பேசிய நீதிபதிகள், தம்பதியின் பரஸ்பர ஒப்புதலுடன் கடந்த செவ்வாய் கிழமை விவாகரத்து வழங்கினர். ஒரே முறையில் வழங்கப்படும் நிரந்தர ஜீவனாம்சமாக கணவர், மனைவிக்கு ரூ.5 கோடியும், மகனுக்கு ரூ1. கோடியும் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘‘ ஜீவனாம்சம் கணவனுக்கான அபராதம் அல்ல. மனைவியின் கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்வதற்காக உத்தரவிடப்படுகிறது’’ என கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in