தெலங்கானாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரியில் மூழ்கி விபத்து: 5 பேர் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், யாதாத்ரி போங்க்ரி மாவட்டத்தின், ஜலால்பூர் என்ற கிராமத்துக்கு அருகில் இன்று கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏரிக்குள் பாய்ந்து மூழ்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. நகரில் வசித்து வந்துள்ளனர், விபத்து நடந்தபோது அவர்கள் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னிரவில் தங்களின் வீடுகளில் இருந்து கிளம்பிய அவர்கள், கள் குடிப்பதற்காக இன்று அதிகாலையில் ஜலால்பூர் கிராமத்துக்குச் சென்றுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் வம்சி (23), திக்னேஷ் (21), ஹர்ஷா (21), பாலு (19) மற்றும் வினய் (21) என்பது தெரியவந்துள்ளது. காயமடைந்தவர் மணிகந்த் (21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தெலங்கானா போலீஸ் குழு சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கும், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து ஏரியிலிருந்து வெளியே எடுக்கும் பணிகளை மேற்கொண்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. சட்ட நடைமுறைகளுக்கு பின்பு உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

உள்ளூர்வாசிகள், வேகமாக வந்த கார் ஒன்று அதன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, ஏரியில் மூழ்கி விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in