

பீஜப்பூர்: சத்தீஸ்கரில் 2 கிராம முன்னாள் தலைவர்களை மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டம், பைராம்கர் நகரை அடுத்த ஆதவதா கிராமத்தின் முன்னாள் தலைவர் பர்சா சுக்லா கடந்த 3-ம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் பைராம்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதே மாவட்டத்தின் நைம்டு கிராமத்தின் முன்னாள் தலைவர் சுக்ராம் அவலம் 4-ம் தேதி கடத்தப்பட்டார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இந்த 2 பேரின் உடல்களும் வெவ்வேறு இடங்களில் இருந்து நேற்று மிட்கப்பட்டன. இதில் பர்சா உடல் இருந்த இடத்தில் பைராம்கர் பகுதி மாவோயிஸ்ட் குழுவினரின் துண்டு பிரசுரம் இருந்தது. அதில், பர்சா பாஜகவுடன் தொடர்பில் இருந்ததால் கொலை செய்தோம் என கூறப்பட்டிருந்தது. இதுபோல சுக்ராம் அவலம் உடல் இருந்த இடத்தில் கங்காலூர் பகுதி மாவோயிஸ்ட் குழுவினரின் துண்டு பிரசுரம் இருந்தது. அதில், இந்தக் கொலைக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீஜப்பூர் உட்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் மண்டலத்தில் இந்த ஆண்டில் இதுவரை 55 பேரை மாவோயிஸ்ட்கள் கொலை செய்துள்ளனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.