சம்பல் மசூதி ஆய்வு விவகாரம்: கீழமை நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

ஷாஹி ஈத்கா ஜாமா மசூதி | படம்: ஆர்.வி.மூர்த்தி
ஷாஹி ஈத்கா ஜாமா மசூதி | படம்: ஆர்.வி.மூர்த்தி
Updated on
1 min read

புதுடெல்லி: சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஈத்கா ஜாமா மசூதியில் ஆய்வு நடத்துவது தொடர்பாக புதிய உத்தரவு எதையும் வழங்கக் கூடாது என கீழமை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதியை அண்மையில் ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. ஏற்கெனவே கோயில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து அங்கு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இது கலவரமாக மாறியதில் ஏற்பட்ட உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. 30 போலீ​ஸார் காயமடைந்​தனர். மேலும், அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சம்பல் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறும்போது, “மசூதி ஆய்வு தொடர்பான விவகாரத்தில் கீழமை நீதிமன்றம் எந்த புதிய உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது. இது தொடர்பாக கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கிறோம்.

வழக்கு தொடர்பாக ஷாஹி ஈத்கா ஜாமா மசூதி கமிட்டி, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரை இந்த உத்தரவு தொடரும். அதுவரை அங்கு அமைதியும், மத நல்லிணக்கமும் தொடர அரசுகள் ஆவன செய்யவேண்டும். ஈத்கா ஜாமா மசூதி கமிட்டி சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதும், அந்த வழக்கை 3 நாட்களில் எடுத்து அலாகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிக்கவேண்டும்” என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in