பெங்களூருவில் தீவிரவாத செயலில் ஈடுபட்ட லஷ்கர் தீவிரவாதி ருவாண்டாவில் கைது
பெங்களூருவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பாவை இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ருவாண்டாவில் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் உறுப்பினரான சல்மான் ரெஹ்மான் கான், பெங்களூருவில் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர். இவர், ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் போன்றவற்றை சப்ளை செய்வதில் முக்கிய நபராக இருந்தவர்.
பயங்கரவாத தொடர்பான குற்றங்களுக்காக தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் சல்மான் ரெஹ்மான் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். இதையடுத்து, சல்மானை பிடிக்க இண்டர்போல் உதவி கோரப்பட்டு அவருக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சர்வதேச பாதுகாப்பு முகமைகள் சல்மானின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்தது.
இந்த நிலையில், இண்டர்போல், என்ஐஏ மற்றும் சிபிஐ-யின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் காரணமாக ருவாண்டாவில் பதுங்கியிருந்த தீவிரவாதி சல்மான் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார். இவ்வாறு சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பெங்களூருவில் பயங்கரவாதத்தை பரப்புவதற்காக கிரிமினல் சதி செய்ததாக சல்மான் மீது என்ஐஏ கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. அதேபோன்று பெங்களூரு ஹெப்பால் காவல் நிலையத்திலும் இவர் மீது எஃப்ஐஆர் பதிவாகியுள்ளளது.
