Published : 27 Jun 2018 10:07 AM
Last Updated : 27 Jun 2018 10:07 AM
அகமதாபாத்தில் குழந்தையை கடத்த வந்தாக கூறி பிச்சை எடுத்த பெண் ஒருவரை பொது இடத்தில் சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை போலவே பீதியால் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் குழந்தைகளை கடத்தும் கும்பல் அலைவதாக சமூகவலைதளங்களில் பொய்யான செய்திகள் பரவின. சிலர் திட்டமிட்டு பரப்பிய இந்த தகவலால் குழந்தை கடத்தல் தொடர்பாக மக்கள் பீதியடைந்தனர். தமிழகத்திலும் குழந்தை கடத்த வந்தாக கூறி பெண் ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்தது. இதுபோலவே, கர்நாடகா, ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களிலும் சம்பவம் நடந்தன. தற்போது குஜராத் மாநிலத்தில் இதுபோன்ற பரிதாப சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
அம்மாநில குழந்தைகளை கடத்தும் நோக்கத்துடன் நான்கு பெண்கள் ஊடுருவியுள்ளதாக பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களில் ஏற்கெனவே தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. இந்த பீதி பரவி இருந்தநிலையில், ராஜஸ்தானை சாந்திபென் என்ற பெண் அகமதாபாத்தில் பிச்சை எடுத்து வந்துள்ளார். நேற்று அவர் வழக்கம்போல் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தபோது ஒரு சிலர் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர்.
குழந்தைகளை கடத்தும் நோக்கில் அவர் வந்துள்ளதாக கூறி பொது மக்கள் கையில் கிடைத்த கல், கம்பு என அனைத்தையும் கொண்டு கடுமையாக தாக்கினார். பலர் சூழ்ந்து கொண்டு தாக்கியதில் பலத்த காயமடைந்த அவரை சற்று நேரத்திற்கு பின் போலீஸார் வந்து மீ்ட்டனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து குழந்தைகள் கடத்தப்படுவதாக கூறி சமூகவலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குஜராத் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT