

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 2016-ம் ஆண்டு மகேந்திர சிங் (42) என்பவர் அவர் பணியாற்றிய வீட்டில் ரூ.3.5 லட்சம் திருடியதாக ஜீவன் பீமாநகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதால் அவர் அங்கேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மகேந்திர சிங் வழக்கில் ஜீவன் பீமா நகர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் அஜாஸ் கான், காவலர்கள் கேசவ்மூர்த்தி, மோகன் ராம் மற்றும் சிதப்பா பொம்மனஹள்ளி ஆகியோர் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது.
சிசிடிவி கேமரா பதிவில் கொலையான மகேந்திர சிங், சம்பவத்தன்று காலையில் ஆரோக்கியமான முறையில் உள்ளே நடந்து செல்கிறார். ஆனால் சரிந்த நிலையில் போலீஸார் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கிறனர். அவரது பிரேதப் பரிசோதனைஅறிக்கையில் கூர்மையான ஆயுதங்கள், தடிமனான கட்டைகளால் தாக்கியதால் அவர் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை தாக்கி கொன்ற 4 போலீஸாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிக்கிறது.
அவர்களை இந்திய தண்டனைச் சட்டத்தின் 304-ம் பிரிவு மற்றும் 330-ம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றவாளிகளாக கருதுகிறது. எனவே அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, தண்டனைக்காக 28-ம் தேதி ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.