உ.பி. ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகள் மீது கல்வீச்சு - போலீசார் குவிப்பு

உ.பி. ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகள் மீது கல்வீச்சு - போலீசார் குவிப்பு
Updated on
1 min read

சம்பால்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பால் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வு நடத்த வந்த தொல்லியல் துறை அதிகாரிகள் மீது சமூக விரோதிகள் சிலர் ஞாயிற்றுக் கிழமை கற்கள் மற்றும் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தி போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து காவல்துறை இயக்குநர் (டிஜிபி) பிரசாந்த் குமார் கூறுகையில், "நீதிமன்ற உத்தரவின்படி, சம்பாலில் உள்ள மசூதியில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இன்று காலையில் ஆய்வு நடத்த வந்த குழுவினர் மீது சில சமூக விரோதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். காவல்துறையினர் மற்றும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் தற்போது உள்ளனர். நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது. கற்களை வீசியவர்களை அடையளம் கண்டு அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஷாஹி ஜமா மசூதி உள்ள இடத்தில் முன்பு இந்து கோயில் இருந்தது என்று மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் தொடர்ந்த வழக்கின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. நவம்பர் 19ம் தேதியும் மசூதி நிர்வாக குழு மற்றும் உள்ளூர் போலீஸார் முன்னிலையில் இதேபோல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in