Published : 09 Jun 2018 08:20 AM
Last Updated : 09 Jun 2018 08:20 AM

எல்லைப்புற இளைஞர்களுக்கு 5 புதிய படைப்பிரிவுகளில் 60% ஒதுக்கீடு: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் எல்லைப்புற இளைஞர்களுக்கு 5 புதிய படைப்பிரிவுகளில் 60 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஸ்ரீநகர் வந்து சேர்ந்தார். அவர் நேற்று பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குப்வாரா மாவட்டத்துக்குச் சென்றார். அவருடன் மாநில முதல்வர் மெகபூபா முப்தி, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் சென்றனர்.

குப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். குர்ஜார், பேக்கர்வால் சமூகப் பிரதிநிதிகளும் உள்துறை அமைச்சரை சந்தித்தனர். அப்போது தங்கள் பகுதிக்கு தேவையான வசதிகள், மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

பின்னர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எல்லையில் இருந்து 10 கி.மீ. வரையிலான மக்களை கொண்டு 2 படைப்பிரிவுகளை உருவாக்க முடிவு செய்துள்ளோம். மேலும் புதிதாக 5 ‘இண்டியன் ரிசர்வ் போலீஸ் (ஐஆர்பி)’ படைப்பிரிவுகள் உருவாக்கப்படும். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்படுவார்கள். இதில் ஜம்மு காஷ்மீரில் எல்லையில் இருந்து 10 கி.மீ. வரையிலான பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களுக்கு 60 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். இதுதவிர 2 மகளிர் படைப்பிரிவுகள் உருவாக்கப்படும்” என்றார்.

குப்வாரா மாவட்ட போலீஸ் லைன்ஸ் பகுதிக்கும் ராஜ்நாத் சிங் சென்றார். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த மாநில போலீஸ் படையினருக்கு அங்கு அஞ்சலி செலுத்தினார். அங்கு அவர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் அவர் ஜம்மு பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x