பஞ்சாப் முன்னாள் முதல்வர் படுகொலை வழக்கு: குற்றவாளியின் கருணை மனு தொடர்பான உத்தரவு நிறுத்திவைப்பு

பஞ்சாப் முன்னாள் முதல்வர் படுகொலை வழக்கு: குற்றவாளியின் கருணை மனு தொடர்பான உத்தரவு நிறுத்திவைப்பு
Updated on
1 min read

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் படுகொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரிவுபதி முர்மு முன் வைப்பதற்காக, அவரது செயலாளருக்கு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந் சிங் மற்றும் 16 பேர், சண்டிகரில் உள்ள தலைமை செயலகத்தில் கடந்த 1995-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தனர். இதில் குற்றவாளி பல்வந்த் சிங் ராஜோனாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை குறைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இவரது கருணை மனு கடந்த 2012-ம் ஆண்டு அனுப்பப்பட்டது. இந்த மனு மீது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. கருணை மனு மீது விரைவில் முடிவெடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.காவை, பி.கே.மிஷ்ரா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

இதனால் பல்வந்த் சிங் ராஜோனாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முன் வைக்க வேண்டும் என அவரது செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விஷயத்தில் 2 வாரங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரத்தில் மத்திய அரசு சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, குற்றவாளி பல்வந்த் சிங் கருணை மனு கோப்பு குடியரசுத் தலைவரிடம் இல்லை எனவும், அது உள்துறை அமைச்சகத்திடம் உள்ளது எனவும் தெரிவித்தார். இந்த விஷயத்தில் உணர்வுபூர்வமான விஷயங்கள் அடங்கியிருப்பதால் இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரிக்கலாம் என்றார். இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குடியரசுத் தலைவரின் செயலாளருக்கு தாங்கள் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in