பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றபோது இறந்தவர் உயிருடன் திரும்பியதால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி

பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றபோது இறந்தவர் உயிருடன் திரும்பியதால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி
Updated on
1 min read

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோடா பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான பிரிஜேஷ் சுதார். மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த அக்டோபர் 27-ம் தேதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து, அவரது குடும்பத்தார் நவம்பர் 10-ம் தேதி போலீஸில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பிறகு சபர்மதி பாலத்துக்கு அருகில் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் தோற்றம் பிரிஜேஷ் உடல் போன்று காணப்பட்டதால் இறந்தவர் அவர்தான் என கருதி அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை நடத்தினர்.

பின்னர் மறுநாளான வெள்ளிக்கிழமை, இறந்த மகனை நினைவுகூரும் வகையில் அவரது தாயார் பிரார்த்தனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்த கூட்டத்தில் பங்கேற்க இறந்தவர் என்று கருதப்பட் பிரிஜேஷ் மீண்டும் உயிருடன் திரும்பிவந்தது உறவினர்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து பிரிஜேஷின் தாயார் கூறுகையில், “ எனது மகனை எல்லா இடங்களிலும் தேடினோம். போலீஸார் எங்களை அழைத்து அடையாளம் காட்ட கூறியபோது உடல் சிதைந்த நிலையில் இருந்ததால் அது பிரிஜேஷ்தான் என தவறாக நினைத்து இறுதி சடங்குகளை நடத்திவிட்டோம். அவர் திரும்ப வந்தது எங்களுக்கு பேரதிர்ச்சி. எனது மகன திரும்பவும் கிடைத்துவிட்ட சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை" என்றார்.

பிரிஜேஷ் உயிருடன் மீண்டும் திரும்பியது அவரது உறவினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளபோதிலும், போலீஸாருக்கு இது பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது. பிரிஜேஷ் குடும்பத்தினர் அடக்கம் செய்த உடல் யாருடையது என்ற விசாரணையை போலீஸார் தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in