பயங்கரவாதிகள் தற்போது பாதுகாப்பற்ற உணர்வுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்: பிரதமர் மோடி

பயங்கரவாதிகள் தற்போது பாதுகாப்பற்ற உணர்வுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்: பிரதமர் மோடி
Updated on
2 min read

புதுடெல்லி: ஒரு காலத்தில் பயங்கரவாதம் இந்திய மக்களை பாதுகாப்பற்றதாக உணர வைத்தது, ஆனால் இன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பற்ற உணர்வுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவன மாநாடு ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 1947 அக்டோபரில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த உற்சாகத்தை நாளிதழ்கள் பதிவு செய்துள்ளன. அவற்றை நான் பார்த்தபோது, காஷ்மீர் எப்படி வன்முறையால் சூழப்பட்டிருக்கிறது என்பதையும், முடிவெடுக்க முடியாத சூழ்நிலைகள் எப்படி இருந்தன என்பதையும் அந்த நேரத்தில் நான் உணர்ந்தேன்.

மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்தபோது, பயங்கரவாதம் இந்திய மக்களை பாதுகாப்பற்றதாக உணரவைத்தது. ஆனால், தற்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. இப்போது பயங்கரவாதிகள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள்.

எங்கள் அரசாங்கம் தெளிவான நோக்கத்தை நிர்ணயித்துள்ளது. நாங்கள் வாக்கு வங்கி அரசியலில் இருந்து விலகி, மக்களுக்காக, மக்களால் முன்னேற்றம் என்ற மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே எனது அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய மக்கள் தங்கள் நம்பிக்கையை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். சமூக ஊடகங்களின் இந்த காலகட்டத்தில் தவறான தகவல்கள் அதிகம் உள்ளன. அதேநேரத்தில் எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு, ரிஸ்க் எடுப்பதற்குத் தேவையான ஆற்றலை மக்களிடம் அரசுகள் புகுத்தவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் இளைஞர்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் வலுப்பட்டுள்ளது. நாட்டில் இப்போது 1.25 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன. இளைஞர்கள் தேசத்தை பெருமைப்படுத்த ஆர்வமாக இருக்கிறார்கள்.

நம் நாட்டில், நாங்கள் கழிப்பறைகள் கட்டும் பணியை மேற்கொண்டோம். இந்த திட்டம் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. இது சுகாதாரத்தை மேம்படுத்த உதவியதோடு மட்டுமல்லாமல் பொருளாதாரத்தை உயர்த்தவும் வேலைகளை உருவாக்கவும் உதவியது. எல்பிஜி எரிவாயு பலரின் கனவாக இருந்த காலம் ஒன்று இருந்தது. இந்த பிரச்சினையை அரசாங்கம் விவாதித்தது. எங்கள் அரசாங்கம் ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளித்தது. 2014 இல் 14 கோடி எரிவாயு இணைப்புகள் இருந்தன. இன்று, 30 கோடி இணைப்புகள் உள்ளன. இப்போது, ​​எரிவாயு தட்டுப்பாடு பற்றிய பேச்சுக்கே இடமில்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, ​​இந்த நாடு சிதைந்துவிடும் என்று கூறப்பட்டது. அவசரநிலை ஏற்பட்டபோது, ​​இனிமேல் அவசரநிலை எப்போதும் இருக்கும் என்று சிலர் கருதினர். சில தனிநபர்களும், சில நிறுவனங்களும் அவசரநிலையை விதித்தவர்களிடம் தஞ்சம் புகுந்தனர். ஆனால், அப்போதும் இந்திய குடிமக்கள் எழுந்து நின்றனர். கரோனாவின் இக்கட்டான காலம் வந்தபோது ​​இந்தியா தங்களுக்கு சுமையாக மாறும் என்று உலகமே நினைத்தது. ஆனால் இந்திய குடிமக்கள் கரோனாவுக்கு எதிராக வலுவான போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

இன்று இந்தியா சென்று கொண்டிருக்கும் வளர்ச்சிப் பாதையைப் புரிந்து கொள்ள, நமது அரசாங்கத்தின் அணுகுமுறையைப் பார்ப்பது அவசியம். இந்த அணுகுமுறை - மக்களுக்காகப் பெரிதாகச் செலவழிக்கிறது, மக்களுக்காகப் பெரிதாக சேமிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இந்தியாவின் வெற்றி, பெரிய அளவில் கனவு காணவும் அதை நிறைவேற்றவும் நம்மைத் தூண்டியது. இன்று இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்ற நம்பிக்கை, எண்ணம் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in